விண்ணரசின் தன்மை
1 இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும்
பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும்
நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.
விண்ணரசின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்
(லூக் 7:18-35)
2 யோவான் சிறையிலிருந்தபோது
மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத்
தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.
3 அவர்கள் மூலமாக,
"வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" என்று கேட்டார்.
4 அதற்கு இயேசு மறுமொழியாக,
"நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.
5 பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்;
கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்;
தொழுநோயாளர் நலமடைகின்றனர்;
காது கேளாதோர் கேட்கின்றனர்;
இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்;
ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
6 என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்" என்றார்.
7 அவர்கள் திரும்பிச் சென்றபோது
இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்:
"நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்?
காற்றினால் அசையும் நாணலையா?
8 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்?
மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா?
இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.
9 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்?
இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என
நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
10 'இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்'
என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.
11 மனிதராய்ப் பிறந்தவர்களுள்
திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை.
ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என
நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும்
விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது.
தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.
13 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும்
யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.
14 உங்களுக்கு விருப்பம் இருந்தால்
வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்.
15 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.
16-17 "இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்?
இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு,
'நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை.
நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை'
என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.
18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை,
குடிக்கவுமில்லை.
இவர்களோ 'அவன் பேய்பிடித்தவன்' என்கிறார்கள்.
19 மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார்.
இவர்களோ, 'இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன்,
வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள்.
எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு
அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று."
திருந்த மறுத்த நகரங்களுக்குச் சாபம்
(லூக் 10:13-15)
20 இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள்
மனம் மாறவில்லை.
எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார்.
21 "கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு!
பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு!
ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள்
தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால்
அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச்
சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர்.
22 தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட
உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என
நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
23 கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ?
இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்.
ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள்
சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே!
24 தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையை விட
உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என
நான் உங்களுக்குச் சொல்கிறேன்."
தந்தையும் மகனும்
(லூக் 10:21-22)
25 அவ்வேளையில் இயேசு,
"தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக்
குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.
27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.
தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்;
மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி
வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார்.
இயேசு தரும் இளைப்பாறுதல்
28 மேலும் அவர்,
"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்,
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது"
என்றார்.- குறிப்புகள்
[1] 11:5 - எசா 35:5,6; 61:1.
[2] 11:10 - மலா 3:1.
[3] 11:12 - "திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரை விண்ணரசு வல்லமையாகச் செயலாற்றி வருகிறது. ஆர்வமுள்ளோர் அதைக் கைப்பற்றுகின்றனர்" எனவும் இவ்வசனத்தை மொழிபெயர்க்கலாம்.
[4] 11:12,13 - லூக் 1616.
[5] 11:14 - மலா 4:5; மத் 17:10-13; மாற் 9:11-13.
[6] 11:27 - யோவா 3:35; 1:18; 10:15.
[7] 11:29 - எரே 6:16; கலா 5:1.